Total Pageviews

Thursday, November 28, 2013

Siva puraanam


சிவ புராணம் 

நம் பழந்தமிழ் நாட்டிலே ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தவ முனிவர் மாணிக்கவாசகர் அவர்களால் இயற்றப்பட்ட நூல், திருவாசகம் ஆகும். அதில் ஒரு பகுதிதான் சிவ புராணம் ஆகும். இப் பிரபஞ்சத்தின் இறைசக்தியாகிய சிவபெருமானாரின் தத்துவத்தை விளக்கும் இந்த தமிழ் மந்திரம் சக்தி வாய்ந்தது. அதன் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக, அந்த மந்திரத்தில் வரும் வரிகளான "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்" என்ற வரிகள் பரிணாமத்தை விளக்கும் அறிவியல் நோக்கில் அமைந்துள்ளது பெரிதும் வியக்கத்தக்கது.
இந்த அற்புதத் தமிழ் மந்திரத்தை தருமபுரம் திரு. சுவாமிநாதன் அவர்கள் பாடக் கேட்ட  தமிழ் மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும். தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம்- வீராக்கண் என்ற ஊரில் 1923-ஆம் ஆண்டு பிறந்து, தெய்வத் தமிழ் இசையை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தனது 12 வயதிலேயே மயிலாடுதுறை நகரத்தின் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன மடத்தில் சேர்ந்து திருமுறைக் கலாநிதி திரு.வேலாயுத ஓதுவார் அவர்களிடம் மாணவராக தெய்வத் தமிழ் இசை, சைவ சித்தாந்த மரபில் பயின்று தமது ஆன்மீக வாழ்வினைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசவைக் கலைஞராக இருந்தவர். கலைமாமணி விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். அவர் தமது 86-ஆம் வயதில் 2009-ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
தருமபுரம் ப. சுவாமிநாதன்
 அவர் பாடிய சிவபுராணம் இசைத் தொகுப்பினை கீழே நீங்கள் கேட்கலாம்:

(இணையத்தில் பதிவேற்றியவர்: திரு. வெங்கட சுப்ரமணியன்)
     


Sunday, November 10, 2013

Baba's Dress - part 2

சாயிபாபாவின் டை -- பகுதி 2

 ஷீரடி சாயிபாபாவின் கப்னியோ, அல்லது அவரின் இலங்கோடு என்னும் இடுப்புக் கச்சையோ பழையதாய்ப் போனால், கிழிந்து போனால் அவற்றை பாபா எவருக்கும் கொடுத்ததில்லை. மாறாக, துனியில் (நெருப்பு-அக்னிக் குண்டம்) இட்டு எரித்து விடுவார். மேலும் அந்தத் துணிகள் கிழிந்துபோனால்தான் எரிக்கப்பட வேண்டும் என்பதில்லை. சில சமயங்களில் ஓரளவு பயன்படுத்தப்பட்ட துணிகளைக் கூடத் துனியில் போட்டு எரித்துவிடுவார், பாபா. சில நேரங்களில் கிழிந்துபோன ஆடைகளைத் தைத்தும் அணிந்து கொள்வது பாபாவின் வழக்கம். 

சாயிபாபா எந்த பக்தனையாவது ஆன்மீகத்தில் முன்னேறச் செய்ய முடிவு எடுத்துவிட்டால், அப்போது அந்த அதிர்ஷ்டசாலி பக்தர் -சாயிபாபா அணிந்திருந்த பழைய துணிகளை அன்புப் பிரசாதமாகப் பெறுவார். பிரம்மச்சரியதவ ராஜயோகியாய் துனி எனும் அக்னிக் குண்டம் அருகில் அமர்ந்திருந்து உதவி வேண்டுவோரின் குறை தீர்த்த முனிவராம் சாயிபாபாவின் துணியிலும் தவக்கனல் மிகுந்திருக்கும். அதனால் அத்துணிகள் சக்தி உள்ளவையாக இருந்தன. ஒரு தடவை சாயிபாபா தனது கப்னியை மஹல்சாபதிக்கு அன்பளிப்பாய் கொடுத்திருந்தார். இதன் பிறகு இல்லறத் துறவியாக குடும்பப் பொறுப்புக்களையும், கடமைகளையும் கவனித்து வந்த அதே சமயத்தில் மஹல்சாபதி அவர்கள், சாகும்வரை சந்நியாசியாக வாழ்ந்தார்.

மற்றோர் சமயத்தில் சாயிபாபா தனது கப்னியை "முக்தாராம்" என்கிற பக்தருக்கு அளித்திருந்தார். அந்த கப்னி அழுக்காக இருந்ததால், முக்தாராம் அதைத் துவைத்து வாடாவில் (தர்மசாலை) காய வைத்து இருந்தார். இதன்பிறகு முக்தாராம் பாபாவின் தரிசனத்திற்குச் சென்று விட்டார். காகா சாஹேப் தீக்ஷித் வாடாவில் காயப் போட்டிருந்த கப்னிக்கு அருகில் வாமன்ராவ் அமர்ந்து பாதுகாத்துக் கொண்டு இருந்தார். அப்போது அதிசயத்தக்க விதத்தில் கப்னித் துணியிலிருந்து பாபாவின் குரலைத் தெளிவாகக் கேட்டார், வாமன்ராவ். " இதோ, முக்தாராம் என்னைக் கொண்டு வந்து, தலை கீழாகத் தொங்க விட்டு இருக்கிறான், பார் " என்ற பாபாவின் குரல் கேட்டது. 

சட்டென்று சுதாரித்துக் கொண்ட வாமன்ராவ் உடனடியாக அந்த கப்னியை எடுத்துத் தாமே அணிந்து கொண்டார். பிறகு வாமன்ராவ் துவாரகாமாயிக்குச் சென்றார். முக்தாராமுக்குக் கொடுத்திருந்த தனது கப்னியை வாமன்ராவ் அணிந்து வருவதைக் கண்ட சாயிபாபா கோபமடைந்தார். ஆனால் ஆன்மீகப் பாதையில் மன உறுதியுடன், தக்க தருணத்தில் சந்நியாசம் பெறுவதில் வைராக்கியமாக வாமன்ராவ் இருந்தார். இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆன்மீக வாழ்வில் வாமன்ராவ் மிகுந்த உயர்நிலை அடைந்தார்.

அக்டோபர் 15, 1918, செவ்வாய்க் கிழமை அன்று பாபா சமாதி அடைந்த திருநாளில் ஷீரடியில் ஓர் பழந்துணிப் பை திறந்து பார்க்கப்பட்டது. இந்தப் பையினை எவரும் தொட சாயிபாபா அனுமதித்ததில்லை. அந்த பையில் பச்சை நிற கப்னியும், பச்சை நிற தொப்பியும் இருந்தன. அவை காசிராம் என்கிற தையல்காரர் பாபாவுக்குக் கொடுத்தவையாகும். சில நாட்கள் அவற்றை பாபா அணிந்திருந்தாலும் பின்பு வெண்ணிற மேலங்கியையே பாபா விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்த பை, மேலும் பிற பொருட்களுடன் சமாதி உள்ளே சாயிபாபா பரு உடலுடன் வைக்கப் பட்டது. பாபா அணிந்திருந்த மற்றோர் கப்னி, ஷீரடியில் உள்ள தீக்ஷித் வாடா "சாயி பாபா மியுசியத்தில்" மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதை அந்த அருங்காட்சியகத்திலே இன்றும் காணலாம்.

(தொடரும்)







Sunday, November 3, 2013

Baba's Dress

சாயிபாபாவின் டை -- தொடர்








அன்பு சாயி பக்தர்களே, இந்தத் தொடரில் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா அணிந்திருந்த உடை பற்றி விரிவாகக் காண இருக்கிறோம். "கப்தான்" அல்லது "கப்னி" உடை என்பது கணுக்கால் வரை நீண்டு முழுக் கைகளுடன் உள்ள, பொத்தான்கள் தைக்கப்பட்ட பெரிய மேலாடை ஆகும். இது அக்காலத்தில் கம்பளியினாலோ, பட்டினாலோ, பருத்தியினாலோ, அல்லது காஷ்மீர் கம்பளியினாலோ தயாரிக்கப் பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் அணியும் ஆடையாகும். பெர்ஷியா (பாரசீகம்), வெனிஸ், இந்தியா, மற்றும் சீனப் பகுதிகளில் தயாரானது கப்னி.
சாயிபாபா- பழைய படம் 
சாயிபாபா ஷீரடியில் முதன்முதலாக தென்பட்ட காலங்களில் ஒரு விளையாட்டு வீரனைப் போன்று உடையணிந்து காணப்பட்டார். மிக நீளமாக அவரது தலைமுடி பின்பக்கம் தொங்கிய நிலையில் இருந்தது. மக்கள் சண்டை, சச்சரவு இல்லாமல், "தான்" பலசாலி எனும் கர்வம் இல்லாமல், அகந்தை இல்லாமல் அன்புடனும், அடக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ வலியுறுத்தும் வகையில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினார், பாபா. அந்த காலகட்டத்தில் தனது உடையையும், வாழும் முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டார். ஏழ்மைத் துறவும்- இரந்து வாழும் வாழ்க்கை உடைய பக்கீர் போன்று நீண்ட மேலங்கியான கப்னியையும், லங்கோடு எனும் இடுப்புக் கச்சையையும், தலையை முழுவதுமாக மூடிய கட்டும் அணிந்திருந்தார். சிறுவயதில் தனது குருவான மஹான் திரு.வெங்குசா (வெங்கடேசனைக் குறிக்கும் பெயர்) அவர்கள் பயன்படுத்திய அதே துணிதான் இந்த தலைப்பா கட்டு என்று நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

அமர்வதற்கு பழைய கிழிந்த சாக்குப்பை துணியையும், படுக்கையாக கிழிந்த கந்தலான சாக்குத் துணியையுமே பயன்படுத்தினார், சாயிபாபா. இந்நிலையில் கப்னி அணிந்திருந்த பாபா " ஏழ்மை அரசுரிமையைவிட நல்லது, பிரபுத்துவத்தைவிட மிக மிக நல்லது. கடவுள் எப்போதுமே ஏழைகளின் நெருங்கிய நண்பராக உள்ளார்" என்று கூறினார். இந்த காலகட்டத்தில் பாபாவின் உடைமைகளாக களிமண்ணினால் ஆன "சிலும்" என்கிற புகைபிடிக்கும் குழாயும், நீண்ட கப்னி உடையும், தலையில் அணியும்  வெண்ணிறத் துணியும், தகரக் குவளை (டம்ளர்) யும், கையில் வைத்திருக்கும் சிறு கைத்தடி (சட்கா) யும் தான் இருந்தன. சடாமுடி போல திருகி முறுக்கிய நிலையில் பாபாவின் தலைக்கட்டுத் துணி அவரது இடது காது பின்புறம் தொங்கிய நிலையில் காணப்பட்டது. எவ்வித காலணியும் அப்போது அவர் அணிந்திருக்கவில்லை. 

மேலும் பல சுவையான தகவல்களை அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)