Total Pageviews

Saturday, March 26, 2011

Sai Dhyaanam

சாயி தியானம் செய்வது எப்படி ?

சாயி சொந்தங்களே,

சாயி தியானம் செய்வது எளிமையான, சிறப்பான அனுபவம் ஆகும். எனக்குத் தெரிந்த வரையில் விளக்குகிறேன். சாயி தியான படிநிலைகளாவன:-
  1. முதலில் கோயிலில் சிலைக்கு முன்போ, அல்லது சாயி படத்தின் முன்போ அமர்ந்து கொண்டு, அல்லது மனக்கண் முன்பு கற்பனையாக சாயி உருவத்தை கொண்டு வந்தோ உனக்கு வசதியான நிலையில் இருந்துகொண்டு பாபாவின் முகம் முதல் பாதங்கள் வரை, பாதங்கள் முதல் முகம் வரை முடிந்த மட்டும் பார்க்க வேண்டும். இதுவே உருவ தியானம் ஆகும் (Meditation through Visualization)
  2. அடுத்து, பாபாவின் குண நலன்கள் - பொதுநல நோக்கு, தரும சிந்தனை, மக்கட் தொண்டு, உதவும் உள்ளம், உயர்ந்த சிந்தனை, ஏழைகளின் மீது பரிவு, யாராக இருந்தாலும் சமமாக மதிக்கும் ஆத்ம சிந்தனை, உலக சமாதானம், மக்களின் ஒற்றுமை பற்றிய அக்கறை, எல்லா உயிர்களின்மீதும் இரக்கம், இன்னும் இது போன்ற குணங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக பாபாவின் சத் சரித்திரம் என்ற புத்தகத்தை ஏற்கனவே படித்திருக்க வேண்டும். (Thought process on the traits)
  3. பிறகு, பாபாவின் வாழ்க்கை நமக்கு போதிப்பது என்ன? என்று சிந்தனை செய்யும்போது, பற்றற்ற மனோநிலையில் பிரதிபலனை பதிலுக்கு எதிர்பார்த்துக்கொண்டு இல்லாமல், உலக மக்களுக்கே தொண்டு செய்வதுதான் மிகச் சிறந்த வழிபாடு - நிஷ்காம்ய கர்ம யோக வழி என்பது தெளிவாக விளங்கும். அப்படி எந்த எந்த வழியிலெல்லாம் பொதுமக்களுக்கு நன்மை செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் (Brainstorming for the Service to Humanity)
  4. அடுத்தபடியாக இத்தகைய சன்மார்க்க தொண்டு செய்வதற்கு ஏற்ற சக்தியை பெற பாபாவிடம் வேண்டுதல்;  வைராக்கியம், நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி  இவற்றை வளர்த்துக்கொள்ள உறுதி எடுத்துக் கொள்ளல் (Determination, Complete faith, Patience, Persistence).
  5. மனதை ஒருமுகப்படுத்தி உயர்ந்த மன நிலையில் சிறிது நேரம் உற்சாகத்தோடு இருத்தல் (Concentration).
  6. இறுதியாக இரு கை கூப்பி பாபாவை வணங்கி தியானத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்க்கை கடமைகளை முடிக்காமலோ, பசியான வயிறை வைத்துக் கொண்டோ, ஆத்திரம்-அவசரத்துடனோ செய்யக்கூடாது. இனிமையான மனதுடன் ஒரு பத்து நிமிடம், பதினைந்து நிமிடம் செய்தாலே போதுமானது. மேலும் மனப் பதட்டம், சஞ்சலம், குழப்பம், பயம் இவை வரும்போது முடிந்த வரையில் இந்த தியானத்தை செய்தால் சிறப்பு. இது சித்தர்களின் மானசீக பூஜை முறை போன்றது.


குறிப்பு: மேற்கண்ட வழிமுறையினை  பல நூலாசிரியர்கள், மகான்களின் அறிவுரைகளை படித்து அதன்படி செய்துபார்த்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது என் பணிவான கருத்து, சொந்த வழிமுறை ஆகும். மேலும் நண்பர்கள் அவரவர் விருப்பப்படி வழிபடலாம்.

ஓம் சாயி


Monday, March 21, 2011

Maha mantra for Chanting

   ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் அருள் வேண்டி ஜெபிக்கப்படும் மகா மந்திரம்தான் - 
" ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி" 

இது எந்த மத, இன, மொழியைச் சேர்ந்தவர்களுக்கும்  ஏற்புடைய மந்திரம்.

ஓம் =  இது இந்தப் பிரபஞ்சத்தின் மூல ஓசை. விஞ்ஞான ரீதியில் அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டது. இயற்கையோடு நாம் இணைய உதவும் இனிய நாதம். தியானம் அல்லது தவ நிலைக்கு கொண்டு செல்லும் புனித சொற்கள்.

ஸ்ரீ   =  திரு எனும் அடைமொழி. பொருட்செல்வமும், அருட்செல்வமும் உள்ள சிறப்பு வாய்ந்த தெய்வீக சக்தி 

ஜெய ஜெய = வெற்றி வெற்றி வெற்றி  உண்டாகட்டும் 

சாயி  =   மனித உருவில் வாழ்ந்த மாமனிதர், புனிதர், உலகக்குடிமகனார் (World Citizen), சான்றோர் (Role Model), உதாரண புருஷர் (Exemplar), பன்மொழி வித்தகர், உளவியல் வல்லுநர், மருத்துவர், சக்திமான், மக்கள் தொண்டர், மக்கள் பாதுகாவலர், மாமனிதர் போல் மக்களுக்கு உதவிய அதிமனிதர், அதிமனிதர் போல் அதிசயங்கள் புரிந்து, அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் தெய்வீக அவதாரம், இறைவன், சாதாரணமாக கண்ணுக்கு தெரியாத கடவுள், நம்பிக்கை-பொறுமை-விடாமுயற்சி இவை உடைய நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களுக்கு இன்றும், என்றும் காட்சி அளிக்கும் பகவான், சித்தர், மகான், பக்கீர், ஆண்டவர், தத்தாத்ரேயர், தெய்வம்.

எவ்வளவு விதம் விதமாய் பெயரிட்டு அழைத்தாலும் அனைத்துலக மக்களுக்கும் தெய்வம் ஒன்றே. 

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 












Saturday, March 19, 2011

Shirdi Sai Bakthi in Tamil - Welcome

அன்பர்களே,

 ஷீரடி சாய் பாபா என்று கோடிக்கணக்கான மக்களால் அழைக்கப்படும் தெய்வ அவதாரம்  பற்றிய தமிழ் வலைப்பூ இது. அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத தமிழ் இளைஞர்களுக்கு உதவுவதே இவ் வலைப்பூ அமைப்பாளரின் நோக்கம். ஷீரடி சாய் பாபாவைப் பற்றி சில வலைப்பூக்கள் ஏற்கனவே பக்தர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை இந்த தெய்வத்தைப் பற்றிய அனுபவங்களைக் கூறும் மிகச் சிறந்த பக்தி வலைப்பூக்கள் ஆகும்.  இந்த வலைப் பூவின் நோக்கம் ஷீரடி சாயி பாபாவின் சன்மார்க்கம் அல்லது மிகச்சிறந்த வாழ்வியல் பாதையை ஏற்க விரும்பும் கணிப்பொறி யுக தமிழ் இளையோர்களுக்கு மனத் தெளிவை ஏற்படுத்த முயல்வது. மிக எளிய நடையில் சாய் ஞான நவீன யக்னம் - அதாவது சாய் பாபா பற்றிய ஞான வேள்வியை இணையத்தின் வழியாகச் செய்வது. ஒத்த கருத்துடைய பக்தர்களின் தேடலில் இளைப்பாறுதல் தரும் கருத்துப் பூங்கா.